ஆனையூர் சாந்தி மாதா 50
ஆனையூர் சாந்தி மாதா அமரர் அன்ரன் மாஸ்டர்ஸ், டேவிட் (வன்னியசிங்கம்) போன்ற பல அப்போதைய இளைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவானது என்றும், நாடகங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு இந்த மாதா சிலை அமைக்கப்பட்டது என்றும் நான் முன்பு ஒரு தகவலாக எழுதியிருந்தேன்.
சில விடயங்களை நான் அப்போது பேசாமல் விட்டிருந்தேன்.
உண்மையில், அந்த இளைஞர்களினால் சாந்தி மாதாவில் ஒரு மாதா சிருபம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு காணியை வழங்க காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்திருந்தார்.
ஆனால், கிராமம் சார்ந்து கம்யூனிஸ்டுகளாலும், ஐக்கிய சனசமூக நிர்வாகத்தினாலும் சரியான ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. அப்போது ஆலய நிர்வாகமும் சனசமூக முடிவுகளுக்கு உட்பட்டதாகவே இருந்தது.
இதன் காரணமாக, அந்த இளைஞர்கள் தாமாகவே முயற்சி செய்து, தற்போது சாந்தி மாதா அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் இருந்த வெறும் காணியில் “அமளிகள்” நாடகத்தை நடத்தினர். அதன்மூலம் 250 ரூபாய்க்கு குறைந்தளவு நிதியே கிடைத்தது. அந்த நிதி போதுமானதாக இருக்கவில்லை.
இவ்வாறு இருக்கையில், ஐக்கிய சனசமூக நிலையத்தின் அப்போதைய நிர்வாகத் தலைமைகளுடன் சமரச உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. சனசமூக மேடையிலேயே 1975 ம் ஆண்டு ஒரு நாடகத்தை நடத்தி, அதிலிருந்து கிடைக்கும் நிதியைப் பெற்று இந்த மாதா சிலையை அமைப்பது தொடர்பாக பரஸ்பர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
நன்நொறி இயக்கம், முன்னேறி இயக்கம் என இரண்டு குழு கிராமத்தில் இருந்தன இவர்கள் கல்வி வகுப்புகள் உட்பட பல செயற்பாடுகளை செய்தார்கள். இதை பின்னொரு நாளில் விரிவாக எழுதுகிறேன்.
அதன்படி, “பெற்றால் தான் பிள்ளை” என்ற நாடகத்தின் தலைப்பு மாற்றப்பட்டு, “எடடி கருக்கு மட்டை பிடியடி இடுப்ப” என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. இதில் அமரர் டேவிட் அவர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த நாடகத்திற்கு ஆனையூர் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதன்மூலம் சேர்க்கப்பட்ட 926 ரூபாய் பணம், சில சனசமூக உறுப்பினர்களின் முரண்பாடுகளைத் தாண்டியும், சந்தி மாதா சிலையை அமைப்பதற்காக வழங்கப்பட்டது. அது அன்றைய சனசமூக அறிக்கையிலும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, சிலரின் பொருள் மற்றும் பண உதவிகளும், சில மீனவர்களின் பண உதவிகளும் இணைந்தன. இவ்வாறு கிடைத்த நிதியின் மூலம் மாதா சிலை அமைப்பதற்கான கிட்டத்தட்ட 1500 ரூபாய் செலவு மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே, இந்த மாதா சிலையின் மீது அந்த இளைஞர்களுக்கோ, சம்பந்தப்பட்ட வலயத்திற்கோ அல்லது சில ஒழுங்கைகளுக்கோ தனிப்பட்ட உரிமை இல்லை. இது எமது பங்கு மக்களுக்குரியது.
– ஆனையூரான்