யாழ். ஆனைக்கோட்டையில் 2300 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் அண்மையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் இன்றைய தினம் (13) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை தினமும் இந்த காட்சிப்படுத்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் பண்டைய வரலாறு
இந்த கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இக்கண்காட்சி ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மை சிறப்பையும் நேரில் கண்டுகொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் இணைத்தல் என்பன இடம்பெற்றிருந்தன.
இதன்பின்னர் தொல்லியல் ஆய்வுத் தளமானது உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், பேராசிரியர்கள் – விரிவுரையாளர்களது உரைகள் என்பன இடம்பெற்றன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல் சின்னங்களை பார்வையிட்டுள்ளனர்.