நோயுற்றோரையும் ஏழைகளையும் அன்புடன் அரவணைப்போம்” – திருத்தந்தை

0

உங்களைச் சந்திப்பதற்கான இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ரிமினி ஆயருக்கும் காரித்தாஸ் அமைப்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ரிமினி பேராலயம். இங்கு நீங்கள் உங்கள் இல்லத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் இருக்க வேண்டும்! ஏனெனில், ஆண்டவர் இயேசு நோயுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மக்களைச் சந்தித்தபோது, அவர்களை அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். அவர்களைக் குணப்படுத்தி, அவர்களின் மாண்புக்கேற்ற வாழ்வை மீண்டும் வழங்கினார்.

இவ்வாறு, இறைவனின் அன்பையும் அவரது எல்லையற்ற இரக்கத்தையும் அனைவருக்கும் வெளிப்படுத்தினார். இயேசுவால் குணப்படுத்தப்பட்டு, புத்துயிர் பெற்ற இந்த மக்கள் பலர் அவரைப் பின்தொடர்ந்து, அவரது சீடர்களின் சமூகத்திலும் இணைந்தனர். நாமும் இதையே செய்ய வேண்டும். இயேசுவால் நம்மைக் குணப்படுத்த அனுமதிப்போம்; அவரது மன்னிப்பைப் பெறுவோம்; மனமாற்றம் அடைவோம். பின்னர், அவர் உருவாக்கிய திருஅவைச் சமூகத்தில் ஒன்றிணைந்து பயணிப்போம். ஏனெனில், பாவத்தையும் மரணத்தையும் வென்ற அவரது நற்செய்தியை அனைவருக்கும் அறிவிப்பதற்காகவே அவர் இந்தச் சமூகத்தை உருவாக்கினார்.

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆண்டவரைப் பின்பற்றி தொடர்ந்து வாழுமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். பங்குத்தளங்கள், பல்வேறு அமைப்புகள், வரவேற்பு மற்றும் சேவை மையங்கள் என திருஅவையின் வாழ்வில் ஆர்வத்துடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் பங்கேற்று, இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் உங்கள் வாழ்வின் மூலம் வெளிப்படுத்துங்கள். அங்கே நாம் கற்றுக்கொள்வதும் அனுபவிப்பதும் இதுதான்: நமது விண்ணகத் தந்தை அன்பில் பெரியவர்; நாம் அனைவரும் அவரது பிள்ளைகள், ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகள். இப்போது, இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த செபத்தால் நமது தந்தையிடம் மன்றாடுவோம்.

Leave A Reply

Your email address will not be published.